Tuesday, April 29, 2014

சோத்துக்காடை - பால கிருஷ்ண பவன், சித்தார்த்புதூர், வைகோ





ஒரிஜினல்:

http://www.sangkavi.com/2014/04/blog-post_28.html

  

ரீமேக்:  

கோவைக்கு பின்புறம் நேற்று உதயமாகி இருக்கும் வைகோ மாவட்டத்தில் புதிதாய் முளைத்துள்ள பாலகிருஷ்ணா பவன் 150 வருட புகழ் பெற்றது. விலையில்லா சைவ உணவுகளை விட இங்கே உணவின் விலை மிக குறைவு என்று டேபிளில் அடித்து சொல்லலாம். இந்த உணவகத்திற்கு நான் 81 மாதங்களாக சென்று வந்து கொண்டிருக்கிறேன் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியே ஹோட்டல் போல இருந்தாலும் உள்ளே பார்க்கும் போதும் ஹோட்டல் போல இருப்பது இதன் தனிச்சிறப்பு. கூட்டம் அதிகமானால் தனது கல்லா சீட்டில் அமரவைத்து சாப்பிட சொல்லும் ஓனரை புகழ வார்த்தையில்லை (வாயில் கொழுக்கட்டை இருப்பதால்). கஸ்டமர்கள் ஒரு முறை சாப்பிட்ட வெள்ளி (எவர் சில்வர்) தட்டை மீண்டும் பயன்படுத்தாமல், புதிது புதிதாக வெள்ளி தட்டுகளை சப்ளை செய்வது இந்த ஹோட்டலின் சுகாதாரத்திற்கு (தட்டை) எடுத்துக்காட்டு.

சரி உணவிற்கு வருவோம் (அடிக்கடி அக்கவுண்ட் வைப்பதால் உணவு உடனே வருவதில்லை எனக்கு. சற்று பொறுமை காக்க). ஆஹா..இதோ காலையில் ஆர்டர் செய்த உணவுகள் மதியம் வந்துவிட்டன. இனிப்பு கொழுக்கட்டை, ஸ்வீட் கொழுக்கட்டை, இலவச சேவை, சில்லி பையன் கோபி மற்றும் சோத்துக்காடை. காடையை தனியே வறுப்பதில்லை இங்கே. தண்ணீர் தேடி அலைந்து கேராகி விழும் காடைகளை பிடித்து அப்படியே கையால் நசுக்கி குழம்பாக்கி சோற்றில் ஊற்றுவது இந்த ஹோட்டலின் ஸ்பெஷல். அதுதான் சோத்துக்காடை.

இங்கு மினி இட்லி சப்ளை செய்யும் விதமே அலாதிதான். மாதம் முதல் தேதி முதல் மாதக்கடைசி வரை ஒரு இட்லிக்கான பில்லை மட்டும் கட்டிவிட்டு டிப்ஸ் தராமல் டேக்கா குடுப்பவன் என்பதால் சப்ளையருக்கு நான் மினி இட்லி கேட்டால் மட்டும் காண்டு ஏறி விடும். தட்டில் இருக்கும் ஒற்றை இட்லியை ஓங்கி குத்துவார். அது மேலே இருக்கும் பேனில் பட்டு தெறித்து எட்டு பீஸாக மீண்டும் என் தட்டில் வந்து விழும். இதோ மினி இட்லி தயார். ஏன் உங்கள் கடையில் சில்லி (குணம் கொண்ட) கோபியை எல்லாம் வேலைக்கு வைக்கிறீர்கள் என்று ஓனரை கேட்டால் முறைக்கிறாரே தவிர இதுவரை பதில் சொன்ன பாடில்லை. தன்மையான கேரக்டர் உள்ள கோபி யாராவது இருந்தால் உடனே ஹோட்டல் ஒன்றை அணுகவும்.  


இந்த ஹோட்டலில் எல்லா உணவுமே வீட்டு சுவையுடன் இருக்கிறதே என்று ஒரு நாள் சப்ளையரிடம் ஆச்சர்யத்துடன் கேட்டேன். ''உனக்கு பக்கத்து சேர், டேபிள்ல உக்கார்ற ஆளுங்களோட லஞ்ச் பேக் அடிக்கடி காணாம போகுதுன்னு கம்ப்ளைன்ட் வந்துட்டே இருந்தது. இப்பதான் விஷயம் புரியுது. அவங்க வீட்டு சாப்பாட்டை நீ ஏன்யா சாப்பிட்ட''என்று ஈவ்னிங் போண்டா, பஜ்ஜிக்கும் சேர்த்து நித்தம் நான்கு வேலை மொத்தம் 30 நாட்கள் மாவாட்ட விட்டு விட்டார்கள்.  

வைகோ வந்தால் மறக்காமல் இந்த ஹோட்டலில் சாப்பிடவும். பரூக் பீல்ட்ஸ் மால் கார் பார்க்கிங் ஓரம் இந்த சோத்துக்காடை உள்ளது. எதிரில் இருக்கும் கார்களை வைத்தே இது எவ்வளவு பிரபல காடைக்கடை என்பதை நீங்கள் கணிக்கலாம். மாலை உணவகம்  7 முதல் 11 வரை வரை. காசு தந்து சாப்பிடும் வாடிக்கையாளர் அனைவருக்கும் ஆளுயர மாலை அணிவித்து சோறு போடுவதால் 'மாலை' உணவகம் என்று இந்த ஹோட்டல் பெயர் பெற்றதாக தல வரலாறு கூறுகிறது. 

8 மணிக்கு மேல் சென்றால் 'க்யூ' வில் நின்றுதான் சாப்பிட வேண்டும். ஏனென்றால் A முதல் P வரை கார் பார்க்கிங்கிற்கான இடம். Q வில்தான் இந்த கடைக்கு இடம் ஒதுக்கி உள்ளார்கள். அங்கு சாப்பிடும் கூட்டத்தை பார்க்கும் போதுதான் தெரியும் இங்கேயும் சாப்பிட்டு விட்டு வீட்டிலும் போய் சோறாக்கி சாப்பிடுபவர்கள் யாரும் இல்லையென்று. 

பெயர்:   பால கிருஷ்ண பவன், சித்தார்த்புதூர், வைகோ.
இடம்: லேடீஸ் மற்றும் மகளிர் ஹாஸ்டலில் இருந்து தப்பி ஓடும்போது உதை வாங்கி 'தேவுடா' என கத்தும்போது வரும் கோவில் தாண்டி அட்மிட் ஆகும் இராமகிருஷ்ணா மருத்துவமனை செல்லும் வழி. 

எச்சரிக்கை: 'லட்டுக்குதான துட்டு, துட்டுக்குதான் லட்டு' என்று ஓட்டல் முதலாளியிடம் லந்து செய்தால் போண்டா மாஸ்டர் உசிலைமணி கையால் சிறப்பு அர்ச்சனை செய்யப்படும்.